அமெரிக்காவில் இடம்பெயர்ந்த 5 இலட்சம் பேருக்கு குடியுரிமை ரத்து!

0
42

வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும் பிற அரசியல் காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகாராகுவா, வெனிசுவெலா ஆகிய 4 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய மக்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் தங்கிக்கொள்ள குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியாகவிருந்த ஜோ பைடனின் அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட 4 நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு மாதத்துக்கு 30,000 பேர் என்ற விகிதத்தில் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இதனையடுத்து, ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைத் தடை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட சட்ட அங்கீகாரம் மார்ச் 25ஆம் திகதி முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான சட்டபூர்வ அனுமதியைப் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ட்ரம்ப் அரசிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லையெனில் ஏப்ரல் 24ஆம் திகதிக்குப் பின் அமெரிக்காவில் இருக்க அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் 2 இலட்சத்து நாற்பதாயிரம் உக்ரேனிய மக்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்தையும் இரத்துச் செய்ய ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.