அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

0
87

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொணடமான், இன்று, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஷான் குலத்துங்க, பெருமாள் இராஜதுறை மற்றும் சிவன்ஜோதி யோகராஜா ஆகிய சட்டத்தரணிகள் ஊடாக, நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திர விசாரணைக்காக, அமைச்சர் ஜீவன் தொண்டமான், மன்றில் ஆஜராகியிருந்தார்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, நானு ஓயா உடரதல்ல தோட்டத்தில் கோப்பி பயிரிடுவது தொடர்பில், அத்தோட்ட மக்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டிருந்த தொழிற்சங்க பிரச்சிணைக்கு, பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண, நுவரெலியா மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் சென்றிருந்தார்.

அதன் போது இடம்பெற்ற பேச்சு வார்த்தையில், இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பாத நிலையில், தான் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படபோவதாக, ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும், நுவரெலியா பீட்று தோட்ட தொழிற்சாலைக்கு சென்றிருந்தார்.

இதனால், அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொழிற்சாலை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தார், பீட்று தோட்ட அதிகாரிகளை அறையொன்றில் வைத்து பூட்டினார் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டினார் என, மூன்று குற்றச்சாட்டுகளை அமைச்சர் மீது சுமத்தி, பீட்று தோட்ட அதிகாரி டிலும் பத்திரன என்பவரால், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், கடந்த யூன் மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தலைவர் வேலு யோகராஜ் மற்றும் தொழிலுறவு அதிகாரி லோகதாஸ் ஆகிய நான்கு பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

அதனடிப்படையில், நுவரெலியா பொலிஸார், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களுக்கு பின்னர், கடந்த 22 ஆம் திகதி, வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையை, பதில் நீதவான் ஜயமினி அமபகாவத்த முன்னெடுத்ததுடன், சந்தேக நபர்களை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, மன்றில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட ஏ.பி. சக்திவேல், வேலு யோகராஜ், லோகதாஸ் ஆகியோர், இன்று மதியம் மன்றுக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சமர்பித்த நகர்த்தல் பத்திரத்தை ஏற்றுக்கொண்ட, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காங்கனி, விசாரணையை முன்னெடுத்தார்.

அமைச்சர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை வினவினர்.நீதவான், குறித்த வழக்கில் சந்தேக நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதே தவிர, அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை, நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மேற்கொண்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்றில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என, நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.