அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் ஒருபோதும் வழங்கத் தவறமாட்டாது என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் வலேபொட, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் குணவர்தனவினால் முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பிலேயே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் தனது மூலதனச் செலவீனங்களைக் குறைக்கும் என்றும், இவ்விடயம் தொடர்பாக எவ்வித கவலையும் கொள்ள வேண்டியதில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.