இந்த விடயத்திலாவது கட்சிகளின் ஒன்றுமை?

0
140

தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து நாளைய தினம் வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு
விடுத்திருக்கின்றன.
குத்துவிளக்கு சின்னத்தின் கீழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கும் முடிவை முன்னாள் விடுதலை இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கூட்டாக மேற்கொண்டபோது விக்னேஸ்வரன் அந்தக் கூட்டிலிருந்து வெளியேறிருந்தார்.
எனினும், தற்போதையே ஹர்த்தால் அழைப்பில் விக்னேஸ்வரனும் பங்குகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
ஹர்த்தால் மற்றும் பேரணிகள் என்பவை நாட்டுக்கு புதிதல்ல.
இதேவேளை தமிழர் அரசியலுக்கும் புதிதல்ல.
எனினும், இதைத் தவிர வேறு எதனையும்செய்ய முடியுமென்னும் நிலையில்தான் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன.
அதிகளவில் பணத்தை செலவு செய்தால் சில புதிய வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
சுமந்திரன் மேற்கொண்ட கடலில் இறங்கி படகுப் பயணம் செய்வது.
இதேபோன்று, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நிதியாதரவு இருந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் காங்கிரஸ் முன்னெடுத்தது போன்ற 13ஆவது திருத்தச்சட்டத்தை காட்போட்டில் பெரிதாக செய்து அதனை ஒரு வாகனத்தில் வைத்து ஊர்வலம் செல்லலாம்.
ஆனால், இவ்வாறான புதுமையான செயல்பாடுகளில் அனைத்துக் கட்சிகளாலும் ஈடுபட முடியாது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றிணைந்து செல்வநாயகம் காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும், மிதவாத தேசிய எதிர்ப்பு வடிவமான ஹர்த்தால் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
இவ்வாறான அழைப்புகளுக்கு மக்கள் குறிப்பிடத்தக்களவு ஆதரவை எப்போதுமே வழங்கி வந்திருக்கின்றார்கள்.
மக்களின் ஆதரவு என்பது உணர்வுநிலை சார்ந்தது.
ஹர்த்தால் இதேபோன்று முன்னர் இடம்பெற்ற எழுக தமிழ், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி, இறுதியாக நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் அரசியல் விளைவுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையில்லை.
ஏனெனில், இவ்வாறான விடயங்களை கொழும்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள பொலிஸாருக்கான விடயமாகவே இவற்றை அரசாங்கம் கையாள்கின்றது.
பொலிஸார் – சட்டம் ஒழுங்கு என்னும் அடிப்படையில் இவற்றில் தலையீடு செய்கின்றனர்.
முடியுமானவரையில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க முயற்சிக்கின்றனர் – முடியாமல் போகும்போது பொலிஸார் விலகி நின்று அவதானிக்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையின்போது, காண்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைளின்போது, பொலிஸார் மீது சாணியை கரைத்து ஊற்றிய போதிலும்கூட அவர்கள் கடுமையாக நடந்துகொள்ளவில்லை.
அதேவேளை, தென்பகுதியில் ஒப்பீட்டடிப்படையில் பொலிஸார் சற்று கடுமையாகவே நடந்துகொள்கின்றனர்.
எனவே, வடக்கு – கிழக்கில் காண்பிக்கப்படும் ஜனநாயக எதிர்ப்புகளை சட்டம், ஒழுங்கென்னும் அணுகுமுறையின் ஊடாகவே அரசாங்கம் கையாள முயற்சிக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அமைதி வழி எதிர்ப்புகளை காண்பிப்பதில் எந்தவொரு தடையுமில்லை.
ஆனால், இவ்வாறான எதிர்ப்புகள் மூலம் அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்றியமைக்க முடியுமா? இதுவரையான அனுபவங்கள் இல்லையென்னும் பதிலையே நமக்கு கூறுகின்றன.
ஹர்த்தால், பேரணிகள், பல்கலைக்கழக மாணவர்களின் வருடாந்த
உற்சாகம் – இவ்வாறான செயல்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்னைகளை உடனடி – இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் கையாளக்கூடிய அரசியல் பொறிமுறை தொடர்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் சிந்திக்கவேண்டும்.
ஆனால், இவ்வாறான விடயங்களிலாவது கட்சிகள் ஓரணியாக நிற்கவேண்டும்.
ஆனால், அரசியலில் ஒன்றாக நிற்பது என்னும் விடயம்தான், இங்கு தொடர்ந்தும் பிரச்னையாக இருக்கின்றது.
மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி சிந்தித்தால் இது ஒரு சிறிய விடயம்.
ஆனால், இங்கு பிரச்சினை மக்களைவிடவும் தங்களின் சொந்த நலன்கள் கட்சிகளின் தலைவர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றன.