இந்திய – இலங்கை கூட்டு கண்காணிப்பு படையணி

0
117

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கின்றது.
இதேவேளை, இந்திய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மீனவர்களின் கைது நடவடிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதும் இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்வதும் ஒரு தொடர் கதையாகவே நீண்டு செல்கின்றது.
இதுவரையில் பல இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
எனினும், இந்தப் பிரச்னை தொடர்கின்றது.
ஏன் இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க முடியவில்லை? இது தொடர்பில் வடபுல மீனவர்களும் தமிழ்நாட்டு மீனவர்களும் அவ்வப்போது மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்தப் பிரச்னையை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் இதுவரையில் வெற்றியளிக்கவில்லை.
இந்தநிலையில் இந்தப் பிரச்னையை கையாள்வதற்கான புதிய அணுகுமுறைகள் தொடர்பில் இரண்டு அரசுகளும் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமான இணைப்புகள் தொடர்பில் அதிகம் கரிசனை காண்பிக்கப்பட்டு வரும்நிலையில் குறிப்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் ஆர்வம் காண்பிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தப் பிரச்னையை தொடர அனுமதிப்பது இரண்டு நாடுகளுக்குமே நல்லதல்ல.
இதேவேளை, வடக்கு – கிழக்குக்குள் உள்நுழைவது தொடர்பில் சீனா அதிகம் அக்கறையை காண்பிக்கும் நிலையில் இந்தப் பிரச்னையை முறையாகக் கையாளாது விட்டால் இது பிராந்திய பதற்றங்களுக்கான கருவியாகவும் மாறிப் போகலாம்.
ஏற்கனவே, சீனா வடபுல மீனவர்களை இலக்கு வைத்துத் திட்டங்களை மேற்கொள்ளவும் முயற்சித்தது.
மீனவர்கள் பிரச்னையை ஒரு வாய்ப்பாகக் கருதியே சீனா இதன் மீது திரும்பியது.
இரண்டு பகுதி மீனவர்களுக்கும் பாதகமில்லாமல் விடயங்களை எவ்வாறு கையாளலாம்? தென்னிந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான மிகவும் குறுகிய எல்லைப் பகுதியால்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட கடல் எல்லையில் மீன்பிடிப்பவர்கள் – ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் செல்லவே முயற்சிப்பர் – அவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் இவ்வாறான எல்லை தாண்டிய மீன்பிடிப் பிரச்னை ஏற்படுகின்றது.
வடபுல மீனவர்களைப் பொறுத்தவரையில் இது அவர்களின் வாழ்வாதார பிரச்னை.
அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் ஆதங்கப்படுவதிலும் தவறில்லை.
இரண்டு தரப்பு மீனவர்களின் நலன்களையும் கருத்தில்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடயங்கள் கையாளப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்கள் பெருந்தொகையில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள்.
இதன் காரணமாகவே, அவர்கள் கடல் எல்லையைத் தாண்ட முற்படுகின்றனர்.
இதுவே, பிரச்னையின் அடிப்படையாக இருக்கின்றது.
இதுவரையில் இந்த விடயத்தை இலங்கை கடற்படை மட்டுமே கையாண்டு வந்திருகின்றது.
இதற்கு மாறான ஒரு புதிய அணுகுமுறை தேவை.
இரண்டு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றைப் பற்றி சிந்திப்பதே சரியானது.
இதன் மூலம், இலங்கை கடற்படை தன்னிச்சையாக தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.
அதேவேளை, தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டாத வகையில் அவர்களை கட்டுப்படுத்துவதும் இலகுவானதாக அமையும்.
எனவே, இலங்கை – இந்திய கடற்படை கூட்டுக் கண்காணிப்பு பொறிமுறை ஒன்றைப் பற்றி இரண்டு நாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும்.