இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் முறையினால் வடக்கு மக்களே பாதிப்பு : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

0
201

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையினால், இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை, தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், நேற்று இடம்பெற்ற, இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத்ஜேகப் உடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் கடல் வளத்தையும், வட பகுதி தமிழ் பேசும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்குடன், இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் தவறான கருத்துக்கள், இரு நாடுகளுக்கும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடியவை என, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்படும், இராஜதந்திர அணுகுமுறைகளின் தொடர்ச்சியாக, நேற்று, பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன் போது, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.