இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை வெடிப்பு: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

0
155

இந்தோனேசியாவிலுள்ள மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் தூரமளவிற்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ள நிலையில், யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் உள்ள 2,968 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அயலிலுள்ள கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிமலைக் குழம்பை வெளியேற்றி வரும் நிலையில் கடந்த 2010ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.