தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவை எம்.பி.பதவியை இராஜிநாமா செய்யுமாறு கோருவதற்கு தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்து விட்டது என்பது பழைய செய்திதான்.
அவர் இராஜிநாமா செய்தால் அவரின் இடத்துக்கு வருவதற்குத் தயாராக இருப்பவர் கனடா குகதாசன் என்பதும் தெரிந்ததே.
கடந்த தேர்தலில் விருப்பு வாக்கு வித்தியாசத்தில் சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அவர். அதனால் அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஒரு குழுவுடன் வந்து புகார்பட்டியலை வாசித்ததும் – இதனையடுத்து இந்த விடயத்தைக்கையாள குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதும் வாசகர்கள் அறிந்ததுதான்.
சம்பந்தன் ஐயா செயல்படமுடியாத நிலையில் இருப்பதால் அவர் ஆகக்குறைந்தது பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவியிலிருந்தாவது இராஜிநாமா செய்யவேண்டும் என்று ‘ஈழநாடு’ தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
இதன் நோக்கம் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்பவர் பாராளுமன்றத்தில் செயல்படவேண்டும் என்பதாலேயே கடந்த வாரம் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சி கூட்டம் தொடர்பாக வெளியான செய்தி ஒன்றை கீழே தருகின்றேன்.
‘இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களால், திருகோணமலை தமிழ் மக்கள் அநாதரவாகியுள்ளனர்.
திருகோணமலை நிலம் பறிபோய்க்கொண்டிருக்கிறது என திருகோணமலையைச் சேர்ந்த குழுவொன்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று, விளக்கமளிக்க வந்திருந்தது. திருகோணமலைக்கு செயலற்ற எம். பியொருவர் தெரிவாகியுள்ளதால், மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பேபறிபோகும் நிலையேற்பட்டுள்ள போதும், பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவோ, வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ முடியாமல் உள்ளதை சுட்டிக்காட்டினர்.’
இதுதான் அந்தச் செய்தி.
அந்தப் புகார் பட்டியல் சம்பந்தன் ஐயாவுக்கு எதிரானது என்பது இரகசியமானதல்ல.
அப்படியெனில் ஐயா எப்போது செயல்படமுடியாத ஆளானார்? கடந்த தேர்தலில் அவருக்கு மக்கள் வாக்களிக்கும்போது அவர் செயல்படக்கூடியவராக இருந்தார்.
இப்போதுதான் அவர் செயல்பட முடியாதவராக ஆனார் என்றால், அதற்கு முன்னர் திருகோணமலையில் மண் பறிபோகவில்லை என்கிறார்களா அந்த சிவில் அமைப்பினர் என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.
திருமலையில் மக்களின் இருப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள போதிலும் அதுகுறித்து பாராளுமன்றில் குரல்கொடுக்கவோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்கவோ முடியாமல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியபோது,
அங்கே இருந்த எந்தவோர் எம்.பியும் அதற்கு பதிலளித்திருக்கவில்லையா?. திருமலையில் மண் பறிபோகின்றது என்பதை பாராளுமன்றில் திருமலை எம்.பி தான் குரல்கொடுக்க வேண்டும் என்று ஏதேனும் விதி பாராளுமன்றித்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. நாங்கள் திருமலை பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கின்றோம் என்று சமாதானப்படுத்தி அனுப்புவதை விடுத்து, சம்பந்தனை பதவி விலகுமாறு கேட்பதையே மற்றத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என்றால், அவர்களின் நோக்கம் இங்கே விளக்கம் சொல்லி தெரியவேண்டும் என்பதல்ல.
சம்பந்தனின் கதிரையைக் குறித்திருப்பவர்கள் பலர்.
அண்மையில் கூட்டமைப்பின் இரண்டு எம்.பிக்கள் சீனத் தூதரத்தில் சந்திப்பு நடத்தியபோது, அந்தச் சந்திப்பு பற்றிய தூதரகக் குறிப்பில், கூட்டமைப்பின் பிரதி தலைவருடனான சந்திப்பு என்றே எழுதப்பட்டிருந்தது குறித்து ஏற்கனவே இந்தப் பத்தியில் பார்த்திருந்தோம்.
அதாவது சந்தித்தவர்களில் ஒருவர் தன்னைத்தானே பிரதித் தலைவர் என்று தூதரகத்துக்கு அறிவித்திருக்க வேண்டும்.
அப்படியொரு நிலையில் சம்பந்தன் இயங்கமுடியாத நிலையில் இருந்தாலும், சம்பந்தன் என்ற தனிமனிதருக்கு இன்றும் அரசியல் ரீதியாக ஒரு பெறுமதி இருக்கின்றது.
அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து அடுத்தவருக்கு வழிவிடவேண்டும் என்று அண்மையில் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்த சிறீகாந்தா கூட, அவர் திருமலை மாவட்ட எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தாலும் தேசிப்பட்டியல் ஊடாக உடனடியாகவே மீண்டும் எம்.பியாக நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை அதனால்தான்.
சம்பந்தன் என்ற மனிதர் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்ற சிறீகாந்தாவின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
சம்பந்தன் ஐயா தனது பொறுப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதேபோல, அவரை அகற்றுவதற்கு சதிவலைகள்
பின்னப்படுவதைத் தடுக்கவேண்டியதும் அவசியமானதுதான். ஊர்க்குருவி