உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறுவது எப்போது என்பது இன்னமும் பில்லியன் டொலர் கேள்வி.
உள்ளூராட்சி தேர்தலை நடத்த பணம் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றது அரசு.
அடுத்த ஆண்டுதான் இந்த நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றும் அந்தத் தேர்தல் மூலம் மக்கள் நாட்டில் தாம் விரும்பிய ஆட்சியை ஏற்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக தெரிவித்துவிட்டார்.
அப்படியெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலையோ அல்லது பாராளுமன்ற தேர்தலையோதான் அவர் நடத்த விரும்புகின்றார் என்பதை ஊகிக்க முடிகின்றது.
அண்மையில் தன்னைச் சந்தித்த தமிழ் கட்சி ஒன்றின் தலைவருக்கு ஜனாதிபதி தேர்தலே முதலில் வரும் என்று அவர் கூறியதாகவும் ஒரு தகவல்.
இந்த நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய விகிதாசார தேர்தல் முறையில் நடத்துவதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆபிரகாம் சுமந்திரன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
இதே பிரேரணையை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது இது மூன்றாவது தடவை என்பதையும் கவனிக்கவேண்டும்.
பாராளுமன்றில் ஒரு தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அது பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பின் அனுசரணையில்லாமல் தாக்கல் செய்யப்பட்டால் அது எப்பொழுது நிறைவேறும் என்பது கூறமுடியாது.
மாகாணசபை தேர்தல்கள் அது நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து விகிதாசார தேர்தல் முறையிலேயே நடந்து வந்தது.
அதனை தற்போது உள்ளூரட்சி தேர்தல் சட்டத்தில் இருப்பதுபோல தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு தேர்தல் முறையாக மாற்றுவதற்காக நடைமுறையிலிருந்த சட்டத்தை ரத்துச் செய்யும் தீர்மானம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் பின்னர் புதிய முறையில் நடத்துவதற்கான சட்டம் பாராளுமனறத்தில் இன்றுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
அப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தேர்தல் திணைக்களமே அதற்கும் தேர்தல் நடாத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கும்.
ஆனால் அப்படி தேர்தல் திணைக்களம் செய்யாமல் இருப்பதற்காகத்தான் நடைமுறையில் இருந்ததை ரத்து செய்யும் தீர்மானத்தை மாத்திரம் பாராளுமன்றில் நிறைவேற்றிய அன்றைய ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், புதிய சட்டத்தை நிறைவேற்றவில்லை.
அதனால்தான் பழைய சட்டத்திலேயே தேர்தலை நடத்துகின்ற தீர்மானத்தை பராளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி தேர்தலை நடத்தலாம் என்று பலரும் யோசனை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்தப் பத்தியிலும் பல தடவைகள் எழுதியிருக்கின்றோம்.
இந்த நிலையிலேயே கடந்த வாரம் சுமந்திரன் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தக் கோரும் தனிநபர் பிரேரணையை தாக்கல் செய்திருக்கின்றார்.
முன்னதாக நல்லாட்சி அரசில் ரணிலுக்கு முண்டுகொடுப்பதையே தமது பிரதான அரசியல் பணியாக கருதி செயற்பட்டுவந்த கூட்டமைப்பு அப்போது பழைய முறையை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை மூன்றில் இரண்டு ஆதரவுடன் நிறைவேற்ற தன்னலான முயற்சியை எடுத்த பாவத்தைப் போக்குவதற்காகவோ என்னவோ இப்போது சுமந்திரன் தொடர்ந்து தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து வருகின்றார்.
உள்ளூராட்சி தேர்தலை தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி- தேர்தல் செலவிற்கு பணத்தை வழங்க அரசு மறுத்துவருவதால், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் விமர் சனங்களையும் அரசு எதிர்கொண்டு வருகின்றது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கே பணம் இல்லாமல் நடத்த முடியாமல் இருக்கின்றபோது, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்காக பிரேரணை சமர்ப்பிப்பது பலருக்கும் நகைப்பிற்கிடமாக தெரிவது தவிர்க்கமுடியாததுதான்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டியது.
ஆனால் மாகாணசபை தேர்தல், அதுவும் பழையமுறையில் நடத்துவததெனில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாகவும் நடத்தலாம்.
அப்படி நடத்துகின்றபோது உள்ளூராட்சி தேர்தல் செலவிற்கு தேவைப்படுவதுபோல பல பில்லியன் ரூபாய்கள் ஒரே தடவையாக தேவையேற்படாது.
இந்த விடயங்களை சுட்டிக்காட்டி சுமந்திரன் தனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்ற தொடர்பை பயன்படுத்தி தனது தீர்மானத்தையே அரசின் தீர்மானமாக பாராளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.
மாகாணசபைகளுக்கான தேர்தலையாவது நடத்தினால், அரசின் மீதான விமர்சனங்களும் குறைந்துவிடும்!
- ஊர்க்குருவி.