பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து தேசிய இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்று குறித்து கடந்த
வெள்ளியன்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்தக் கலந்துரையாடல் குறித்து இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாமே என்று பலரும் அங்கலாய்த்ததைக் கவனிக்க முடிந்தது.
தாம் ஆரம்பிக்கவிருக்கும் அந்தத் தேசிய இயக்கத்தில் வடக்கிலிருந்து யாரை உள்வாங்கலாம் என்பதற்காக நண்பரிடம் கருத்துக் கேட்டது பற்றியும் வடக்கில்
அண்மைக்காலமாக அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களையும் சில கோமாளித்தனங்களையும் செய்துகொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி அந்த நண்பரிடம் ஆலோசனை கேட்டது பற்றியும் எழுதியிருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு, யார் அந்த நபர் என்பதை அறிய ஏராளமான நண்பர்கள், வாசகர்கள் ஊர்க்குருவியை அணுகியபோதுதான் எவ்வளவு தூரம் அந்தச் செய்தியில் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது.
இப்போது அவர் யார் என்பதல்ல இந்த ஊர்க்குருவிக்கு முக்கியமானது.
ஆனால், இவ்வாறு அறிந்தகொள்ள விரும்பிய பலரும் இவராக இருக்குமா? அவராக இருக்குமா? என்று தத்தமக்கு புரிந்தவாறு கேட்டிருந்தனர்.
அப்போதுதான், நமது தலைவர்கள் பலரின் மீதான நம்மவர்களின் கருத்தைஅல்லது கணிப்பை அறிய முடிந்தது.
அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களையும் சில கோமாளித்தனங்களையும் செய்துகொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி நண்பரிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள் என்றல்லவா எழுதியிருந்தேன்.
அப்படியெனில், இந்த ஊர்க்குருவியுடன் தொடர்புகொண்டு கேட்டவர்கள் தெரிவித்த பலரும் அப்படி கோமாளித்தனங்களைச் செய்துகொண்டிருப்பதாகத் தான் நம்மவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்தபோது அந்தத் தலைவர்களுக்காக அனுதாபப்படத்தான் முடிந்தது.
அவர்கள் கேட்ட அந்த நபரைப் பற்றி – அவர் விபரத்தை எழுதி அவரை அந்தளவுக்கு உயர்த்திப்பார்க்க இந்த ஊர்க்குருவிக்கு மனம் இடம்தரவில்லை.
இனி இந்தப் பத்தியில் எழுத வந்ததைப் பார்ப்போம்.
நேற்று முன்தினம் ‘ஈழநாடு’வில் ”எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இணைத்துக்கொண்டு எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள்.
எதிர்காலத்தில் சஜித்துக்கு பிரதமர் பதவியைக்கூட வழங்க நான் தயார்.’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சந்தித்த மனோ கணேசன், ஹக்கீம்
ஆகியோரிடம் தெரிவித்திருந்தார் என்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் அது வெளிவந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐ.தே.கவையும் இணைக்கும் முயற்சி நடந்தது உண்மை தான் ஆனால், அந்த முயற்சியை சஜித் நிராகரித்து விட்டார் என்று மனோ கணேசன் அறிவித்திருந்தார்.
அது தொடர்பாக வெளிவந்த செய்தியையும் மனோ கணேசன் மறுத்திருக்கிறார்.
இது குறித்து ரணில் தரப்பில் விசாரித்தபோது, அதாவது பிரதமர் பதவியை வழங்குவதற்கு ரணில் தயார் என்று தெரிவித்திருந்ததும் உண்மைதான்.
ஆனால், உடனடியாக வழங்கமுடியாது.
ஏனெனில், தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பொதுஜன பெரமுன அதற்கு உடன்படாது என்பதாலேயே அவர் அவ்வாறு கூறியிருந்தார்
என்று ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக, உடனடியாக பிரதமராக நியமித்திருந்தால் சஜித் அதற்கு உடன்பட்டிருப்பாரோ என்னவோ? அவரின் அணியிலிருந்து சிறுபான்மைக் கட்சிகள் ரணிலுடன் இணைவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது.
அதனால்தான் அவர்களைத் தனித்தனியே சந்தித்து சஜித் கடைசிக் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டிருகின்றார்.
அவரின் அந்த சந்திப்புக்கு பின்னர் நிலைமை மாறுமா என்பது தெரியவில்லை.
சிறுபான்மைக் கட்சிகளைவிட, தன்னிடமுள்ள முப்பத்தியேழு பேரில் பெரும்பாலானவர்கள் ரணிலுடன் சங்கமமாவதும் சஜித்தை மேலும் பலவீனமடையவே செய்யும்.
இந்நிலையில், அவர் உடனடியாக மறுத்தாலும் விரைவில் அவரின் முடிவில் மாற்றம் வரலாம் என்கின்றனர் சிலர்.
இன்னும் சில நாட்களில் எல்லாம் தெரியவரலாம்.!
- ஊர்க்குருவி