‘நீதிவான் சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராகவும் நீதித்துறையின் சுயாதீனம் காக்கவும் தமிழ் தேசத்தின் இருப்பை காக்கவும் கோரி கிளிநொச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.’
‘முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று முதல் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.’
‘முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க
வலியுறுத்தி யாழ். மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.’
மேலேயுள்ளவை ஒரு நாள் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளின் முதல் வாக்கியங்கள்.
ஒரு விடயத்துக்காக நடக்கும் போராட்டங்கள் வௌ;வேறு கோரிக்கைகளுடன் நடத்தப்படுகின்றன.
அதிலும் நாம் கவனிக்க வேண்டியது, நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
நீதிபதி ஒருவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்கிறார்.
பாராளுமன்றத்தில் சரத் வீரசேகர போன்றவர்கள் அவருக்கு எதிராக பேசிய பேச்சுகள் காரணமாக அவருக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்.
கோரிக்கைகள் எல்லாம் சரியானதுதான்.
ஆனால், எம்மை உறுத்துகின்ற ஒரு கேள்வி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் நீதிபதி நாட்டுக்கு திரும்பவேண்டும்.
தனக்கு எந்தவகையான அச்சுறுத்தல் இருந்தது, அதனை எவர் எந்த வகையில் வெளிப்படுத்தினார்கள் என்பதை விளக்கவேண்டும்.
தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக அவர் சொல்வது, சட்டமா அதிபர் தீர்ப்பை மாற்றுமாறு கேட்டது பற்றிய விவரங்கள் விசாரணை செய்யப்படவேண்டும்.
அதற்கு அவர் பிரசன்னம் அவசியமானது.
ஆகக்குறைந்தது அவர் எங்கிருக்கிறார் என்பதையாவது அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தி, விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும்.
அப்போதுதான் உரிய நடவடிக்கையை எடுக்கமுடியும்.
அவர் அதனைச் செய்ய முன்வராத போது, அவரை நாட்டுக்கு அழைத்துவர இன்ரர்போலின் உதவியை நாடச் சொல்கிறார்களோ தெரியவில்லை.
எங்களுடைய கவலை எல்லாம் நீதிபதியின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றவர்கள் எல்லாம் தமது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக தெளிவான
கருத்தை கொண்டிருக்கிறார்களா என்பதுதான்.
ஒவ்வொருவரும் ஆளை ஆள் முந்திக்கொண்டு போராட்டங்களை அறிவிப்பதும், அவை பல்வேறு குழுக்களாக நடைபெறுவதும் ஒவ்வொருவரதும் ‘பலத்தைக்’
காட்ட உதவுமே தவிர தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கூடி புதன்கிழமையன்று மனித சங்கிலிப்போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர்.
ஆனால், அன்றே தமிழரசு கட்சி திங்களன்றே தாங்கள் கிளிநொச்சியில் எதிர்ப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்திருந்தது.
அதாவது தமிழரசுக் கட்சி புதனன்று மனிதசங்கிலி போராட்டத்தை நடத்துவதற்கு முடிவெடுக்கின்றது.
ஆனால், தமிழரசின் கிளிநொச்சி கிளை தனியாக கிளிநொச்சியில் போராட்டம் நடத்துகின்றது.
போராட்டம் என்றால் ஒரு கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவேண்டும்.
அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை அந்த போராட்டம் நடைபெறுகின்ற இடத்தை முடக்கிப்போடவேண்டும்.
அதைவிடுத்து ஒவ்வொருவரும் தத்தமது பலத்தை காட்டுவதற்காக வௌ;வேறு கோசங்களுடன் போராட்டம் நடத்துவது தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் இரண்டு இளைஞர்கள் தமக்குள் கதைத்துக்கொண்டு சென்றதை கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்பர், அவர்கள் பேசிய விடயத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
‘மச்சான், போராட்டத்திலை முன்னுக்கு நான் நிற்கிறதை வடிவா படம் எடுக்கிறதோட வீடியோவையும் எடு.
நான் நிற்கிறதை நீ படம் எடுத்த பிறகு, நீ போய் முன்னுக்கு நில்.
நான் உன்னை எடுக்கிறன்.
இப்பிடி எடுக்கிற படத்தோட போனமெண்டால் லண்டனிலை நம்மட கேஸூக்கு அது போதுமாம்…’!
-ஊர்க்குருவி.