இரு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு ஓட்டியதில் ஏற்பட்ட விபரீதம்!

0
205

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பயணித்த இரண்டு தனியார் பேருந்து போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்த முயற்சித்த நிலையில் நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் – முழங்காவில் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்த மற்றைய தனியார் பேருந்து சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில், மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன், பேரூந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

மன்னார் – யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.