கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் மாதத்திற்கு ஒரு முறை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை ஆணையர் காமினி திசாநாயக்க கூறுகையில், இது அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும் விதி. வழக்கமாக ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இரண்டு முன்னாள் அமைச்சர்களும் ஒரே பொதுவான பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் சிறைச்சாலைப் பணிகள் ஒதுக்கப்படுவது இன்று பெரும்பாலும் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
முந்தைய செய்தி…
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நீண்ட கால சிறைத்தண்டனை வியாழக்கிழமை (29) விதித்தது.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சரும் முன்னாள் லங்கா சதோச தலைவருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
மஹிந்தானந்த அளுகமகேவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும், நளின் பெர்னாண்டோவுக்கு நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிபதிகள் மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவேரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
2014 செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 சதுரங்கப் பலகைகள் சம்பந்தப்பட்ட மோசடி கொள்முதல் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) வழக்கு தொடரப்பட்டது.அரசுக்கு ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ. 53.1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் ஆறு கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்காக ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வாவும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்காக ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்கவும் ஆஜரானார்கள்.