இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி உண்ணாவிரதம்

0
15

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இணைந்து இன்று (28) வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகு அரசுடைமையாக்க பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 23 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஐந்து படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறையில் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறை கைதிகளாகவும் 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை தெருவில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் இன்று (28) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தங்கச்சி மடத்தில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.