சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. சீன இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால், இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக கொழும்பிற்கு டெல்லி உயர் மட்டம் தகவல் அனுப்பியுள்ளது. யுவான் வோங் – 5 இராணுவ கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது. ஜியாங்கியின் துறைமுகத்திலிருந்து கிழக்கு சீன கடல் ஊடாகவே யுவான் வோங் – 5 கப்பல் இலங்கை நோக்கிய பயணித்தை ஆரம்பித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் அதி நவீன செய்மதி தொழில்நுட்பத்தில் யுவான் வோங் – 5 கப்பல் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியது.