தென்கொரியாவில் நடைபெற்ற பசுமைக் காலநிலை மாநாட்டில் பங்கேற்ற சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் அந்நாட்டின் பிரதி சுற்றாடல் துறை அமைச்சர் யோ ஜேசுலைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தென்கொரியாவின் பரடைஸ் ஹோட்டலில் நடைபெற்ற இம் மாநாட்டில் ஆசிய, பசுபிக் சமுத்திர நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட், மாநாட்டில் கலந்து கொண்டோருடன் பேச்சுக்களை நடத்தினார்.
அத்துடன் தென்கொரிய நாட்டின் பிரதி சுற்றாடல் துறை அமைச்சர் யோ ஜேசுலை சியோலில் சந்தித்து முக்கிய பேச்சுக்களையும் நடாத்தினார். இதன்போது இலங்கையில் சுற்றாடல் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடல் மேம்பாடு மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு அந்நாட்டு அமைச்சர் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை மற்றும் தென்கொரிய விவசாயிகளின் பரஸ்பர தொழிநுட்ப மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்தும் ஆர்வம் காட்டப்பட்டது.
மேலும் இத்துறைக்கு ஒத்துழைத்து நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளையும் அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்தார். இதன்போது சுற்றாடல், காலநிலை மாற்றம் மற்றும் இதர விடயங்கள் குறித்தான திட்டங்களை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், முகவர் நிறுவனங்களுடன் அமைச்சர் ஹாபிஸ் நசீர் நடாத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக சுற்றாடலுடன் தொடர்புடைய திட்டங்களை நிறைவேற்ற பெருமளவான நிதியுதவிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.