கடந்த ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை சேர்ப்பதற்காக கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் விடுத்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையாவதை தடுத்து விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
உதவி ஆசிரியர் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி பதுளையைச் சேர்ந்த பினிஷா முஸாம்மில் தாக்கல் செய்திருந்த மனுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா விடுத்த வேண்டுகோளை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லபார் தாஹிர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஜுன் 14ஆம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் சேர்ப்புக்கான வர்த்தமானியை கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் வெளியிட்டதாகவும் அது ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு விதிகளுக்கு முரணாக இருந்ததாகவும் ஆசிரியையான மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.