உலகளாவிய ரீதியில் கொவிட் வைரஸின் அபாயம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையையும் பாதிக்கும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். மேலும் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.கொவிட் வைரஸ் தொடர்பான, தகவல்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உலகளவில் கோவிட் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. உலகளாவிய நிலைமையைப் போலவே, இலங்கையிலும் எண்ணிக்கையில் குறைவு உள்ளது. கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், தினமும் 20க்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகியுள்ளன. எனினும், உலகளாவிய ரீதியில் அல்லது உள்நாட்டில் தொற்று நிலைமை நிரந்தரமாக அகற்றப்பட்டுவிட்டதாக மக்கள் மனநிறைவு கொள்ள வேண்டாம். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுதல் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் தொற்று மோசமடைவதைத் தடுக்க மக்கள் தங்கள் தடுப்பூசிகளை விரைவாகப் பெற வேண்டும் எனவும் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.