திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவர் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் பெண் நிகிதாவை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என நடிகர் ராஜ்கிரண் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண்ணை விசாரித்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லையே என்றும் அவர் வினவியுள்ளார்.
அஜித்குமார் லாக்-அப் மரணத்திற்குத் தமிழ்த் திரையுலகில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து ராஜ்கிரணும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் இதுவரை வாய் திறக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், சாந்தனு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “அஜித்குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல. இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar” என்று பதிவிட்டிருந்தார்.