கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது எனக் கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என மீனவர் ஒருவர் கற்பிட்டிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த கற்பிட்டிப் பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்து காணப்படுகின்றது எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாகவும், எனினும் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.