காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணயக் கைதிகளை உயிருடன் மீட்டது.
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக இப்போதும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேவேளை, இந்தப் போரில் காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 28 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தெற்கு நகரமான கான் யூனிசிலுள்ள நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.