கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதியில் கடந்த திங்கட்கிழமை (17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கிராண்ட்பாஸ், கொஸ்கஸ் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்“ என்று அழைக்கப்படும் இஷார லக்மால் ஹேவத் என்பவரின் உதவியாளர் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.