கிரீஸில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
117

காணாமல் போனதாகக் கருதப்பட்ட நான்கு பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிரீஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு  அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு தெசலியில் உள்ள கார்டிட்சா நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

அதில், 58 வயதான ஆண் ஒருவரின் சடலம் இரண்டு கிராமங்களுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது.

காணாமல்போன 42 வயது ஆணின் சடலம் வோலோஸ் நகருக்கு அருகே கடலில் மிதந்ததாக  கடலோர காவல்படை தெரிவித்தது. 

மத்திய கிரீஸைத் தாக்கிய வெள்ளத்தால் கிட்டத்தட்ட 3,500 பேர் வெளியேறியதாக கிரீஸின் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

தெசலியின் முக்கிய நீர்வழிப்பாதையான பினியோஸ் நதியின் வாயில் உயர்ந்து கொண்டிருந்தாலும் வெள்ளம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வியாழன் முதல் சனிக்கிழமை வரை பெலியோன் தீபகற்பத்தில் சிக்கித் தவித்த 335 பேரை மீட்டுள்ளதாக கடலோர  காவல்படை தெரிவித்துள்ளது.