ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்னைகளுக்கே முன்னுரிமையளிக்கவுள்ளது.
அதுவே, தேசிய அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கப் போகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போவதில்லையென்று தீர்மானித்திருக்கின்றது.
எனினும் ரணில் தலைமையிலான அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடியே வடக்கின் விடயங்களை அணுகவுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக தமிழ் பிரதிநிதிகளை நியமிக்கும் யோசனையையும் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நடைமுறையே பின்பற்றப்படவுள்ளது.
எனினும் கிழக்கு மாகாணம் மூவினங்களையும் கொண்டிருப்பதால், அதற்கமையவே முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த பின்புலத்தில், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர் பதவிகள் தொடர்பிலும் கூட்டமைப்பின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.
இவற்றை கூட்டமைப்பினர் எவ்வாறு கையாளப் போகின்றனர்? வழமைபோல் ரணில் ஒரு நரியென்று கூறிவிட்டு, தமிழ் பிரதிநிதிகள் ஒதுங்கிவிட்டால், தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் நிலைமை ஏற்படும்.
ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் அதிகம் விவாதிக்க வேண்டிய தேவையில்லை.
ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான நிர்வாகத்தினருடன், ஏற்கனவே, கூட்டமைப்பினர் ஜந்து வருடங்கள் பணியாற்றிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே உருவாக்கப்பட்டது.
குறித்த அமைச்சின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர்களாக, கூட்டமைப்பின் பிரதிநிதிகளே நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் செயற்திறனுடன் செயல்பட்டார்களா இல்லையா என்பது கூட்டமைப்பின் கரிசனைக்குரியதே தவிர, அது அரசாங்கத்தின் பிரச்னையில்லை.
இந்த அடிப்படையில் சிந்தித்தால், ரணிலின் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதில், கூட்டமைப்பினருக்கு பெரியளவில் தடைகள் இல்லை.
இதனையும் தாண்டி ஒரு தடையிருக்குமாக இருந்தால், அது சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்ற தனிநபர்களால் ஏற்படும் தடையாகவே இருக்க முடியும்.
ஏனெனில், பொதுவெளிகளில் குறித்த இருவரும் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்ப்பதை ஒரு பணியாகவே முன்னெடுத்துவருகின்றனர்.
இந்தப் போக்கு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பணியாற்றுவதில் தடைகளை ஏற்படுத்தலாம். சிலரது தனிப்பட்ட விவகாரங்களால், தமிழ் மக்களின் நலன்கள் பாதிக்குமாக இருந்தால், அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல எந்தவொரு சிங்கள அரசியல் வாதியும், தமிழ் மக்களின் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துவிடப் போவதில்லை.
இந்த உண்மையை கருத்தில் கொண்டுதான், சிங்கள ஆட்சியாளர்களை அணுக வேண்டும். ஆனால், ஒப்பீட்டடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவோடு பிரச்னைகள் தொடர்பில் புதிதாக உரையாட வேண்டியதில்லை.
இந்த விடயங்களில் நீண்ட அனுபவமுள்ளவர் என்பதால், அவருடன் விடயங்களை கலந்தாலோசிப்பது இலகுவானது.
எனவே விடயங்களை படிப்படியாக கையாளும் உத்தியோடுதான், ரணில் அரசாங்கத்தை கூட்டமைப்பு அணுக வேண்டும்.
பொருளாதார விவகாரம் பிரதானமாக இருப்பதால், அனைத்தையும் பொருளாதார கண்ணோட்டத்துடன் அணுகவே அரசாங்கம் முயற்சிக்கும்.
அதே அணுகுமுறையை கைக்கொண்டு, வடக்கு கிழக்கில் நலிவுற்ற மக்களை தூக்கிவிடுவதற்கான பிரத்தியேக வேலைத்திட்டங்களை கூட்டமைப்பு திட்டமிட வேண்டும்.
வடக்கு, கிழக்கு பொருளாதார அபிவிருத்திக்கான பிரத்தியேக திட்டமொன்றை கூட்டமைப்பு வகுக்க வேண்டும்.
அதனை அமுல்படுத்துவதற்கான பொறுப்பையும் தங்களிடமே ஒப்படைக்குமாறு ரணில் அரசாங்கத்தை கோரலாம்.
அரசியல் ரீதியில் நோக்கினாலும், கூட்டமைப்புக்கு இது சாதகமானதாகும்.