9 பேரை, சயனைட் கொடுத்து, கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தாய்லாந்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30-40 வயதுக்கு இடைப்பட்ட இப்பெண் தலைநகர் பேங்கொக்கில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருட இடைவெளியில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. பணமே இக்கொலைகளுக்கான காரணமாக இருக்கலாம் என தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் அர்சயொன் க்ரெய்தோங் தெரிவித்துள்ளார்.
10 ஆவது நபர் ஒருவர், வாந்தியெடுத்த பின்னர் உயிர் தப்பினார் என தாய்லாந்து தேசிய பொலிஸ் பிரதித் தலைவர் சுராசெட் ஹக்பார்ன் கூறியுள்ளார்.
சந்தேக நபர், பெண்ணொருவருடன் இராப்போசனத்துக்குச் சென்றார். அப்பெண் வாந்தியெடுத்த பின்னர் உயிர் தப்பினார். அப்பெணும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியாவார் என சுராசெட் கூறினார்.
ரட்சாபுரி மாகாணத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது நண்பி ஒருவரை இப்பெண் கொலை செய்தார் என பொலிஸார் முதலில் சந்தேகித்தனர்.
சந்தேக நபரை விசாரித்த பின்னர், கஞ்சனாபுரி மற்றும் நகோன் பதோம் மாகாணங்களில் நடந்த ஏனைய சயனைட் மரணங்களுடன் இப்பெண்ணை பொலிஸார் தொடர்புபடுத்தினர்.