சீனக்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதால் இலங்கை – இந்திய உறவில் விரிசல் ஏற்படும் என்று வெளியாகும் செய்திகளை அடியோடு மறுக்கின்றோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சீன கப்பலின் வருகை தொடர்பில் எழுந்த சர்ச்சையான கருத்துக்களையடுத்து இலங்கை அரசு இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்தது. கப்பல் வருகைக்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. அதற்கு இணங்கியே குறித்த கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருகின்றது. எமக்கு இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள். எந்த நாடுகளையும் நாம் பகைக்க முடியாது. இரு நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றன. எனவே, இரு நாடுகளையும் நாம் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும்’என கூறியுள்ளார்.