அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையும் எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நிலையில் அந்த பிரேரணை இதுவரை தயாரிக்காததால் நாங்கள் அதனை வாசிக்காமல் அதில் கையொப்பமிட விரும்பவில்லை. அந்தவகையில் அதனையும் அவர்கள் முடிவு செய்ததன் பின்னர் எமக்கு அறிவித்தால், பொறுத்தமாக இருந்தால் அந்தப் பிரேரணையிலும் நாம் கையொப்பமிடுவோம் என்ற கருத்தையும் நாம் பதிவு செய்துவிட்டு வந்தோம்.
எம்மை பொறுத்தவரையில் கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இலங்கையின் சரித்திரத்தில் முதற்றடவையாக சிங்கள பௌத்தர்களுடைய ஆட்சி என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி அதை வைத்து சொந்தம் கொண்டாடி தனி சிங்கள மக்களின் நலனை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருவது தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்றார்.