2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமைக்காக பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதிகள் பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொலிஸ்மா அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததன் மூலம் அரசியலமைப்பின் கீழான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான ஆசாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 திகதி அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.