இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் தமிழ் அரசியல் கைதியான சி.ஆரூரனிற்கு அரச இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்தவாறே எழுதிய ‘ஆதுரசாலை’ எனும் புத்தகத்திற்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் இதுவரை 8 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.