நில அபகரிப்புக்கு எதிராக போராடுதல்

0
104

யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கம் – என்னும் சொல்லை உச்சரித்துக் கொண்டே – மறுபுறம் பல்வேறு வழிகளிலும் நில ஆக்கிரமிப்பை கண்டும் காணாமல் விடுவதன் ஊடாக, ஆக்கிரமிப்பிற்கு அரசாங்கங்கள் பல்வேறு வழிகளில் உதவியிருக்கின்றன.
கடந்த பதின்நான்கு வருடங்களில் – விகாரை நிர்மாணம், தொல்பொருள் இடங்கள், உல்லாசப்பயண அபிவிருத்தி – என பல வழிகளிலும் நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால், இவைகள் எவையுமே ஆக்கிரமிப்பு என்னும் வடிவத்தில் நிகழவில்லை.
இந்த இடத்தைத்தான் தமிழர் தரப்புக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
வரலாற்றுரீதியாக பௌத்த விகாரைகள் இருந்த இடங்கள் என்னும் பெயரிலேயே, அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
ராஜபக்ஷ குடும்ப அதிகாரம் இந்த விடயங்களுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கியது.
எவர் வேண்டுமனாலும் காணிகளை அபகரிக்கலாம் என்னும் வகையில் கதவை அகலத்திறந்துவிட்டது.
இந்தக் காலத்தில் வடக்கு, கிழக்கில் குறிப்பாக திருகோணமலையில் உல்லாசப்பயண மேம்பாடு என்னும் பெயரில் நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு
வழங்கப்பட்டது.
இதில் அதிகமானவர்கள் ராஜபக்ஷக்களோடு தொடர்புபட்டவர்கள்.
2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நிலைமைகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தவாறு விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பிற்கான வரைபு, உபக்குழுக்கள் – என்றெல்லாம் தங்களுக்குள் முட்டிக் கொண்டிருந்த போது, மறுபுறம் தனது தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவின் 94ஆவது, பிறந்த தினத்தில் புதிய விகாரைக்கான அடிக்கல்லை நட்டுவைத்தார் சஜித் பிரேமதாச.
அத்தோடு பிரேமதாசவின் நினைவாக, 1,125 விகாரைகள் கட்டப்படு மென்றும் சூளூரைத்தார்.
அதன் ஆரம்பமாக 25 மாவட்டங்களிலும், மாவட்டங்களுக்கு ஒரு விகாரை என்னுமடிப்படையில் அடிக்கல்கள் நட்டப்பட்டன.
அந்த விகாரைகளுக்கான கட்டுமாணங்களே தற்போது இடம்பெற்றுவருகின்றன.
தையிட்டி விகாரையும் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தின் அடிக்கல் நடப்பட்ட ஒன்றுதான்.
நிலைமை இவ்வாறிருக்க நில ஆக்கிரமிப்பு என்னும் சொல்லை உச்சரித்துக் கொண்டிருப்பதால் மட்டும், நில ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்தி விடமுடியாது.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் அனைவருமே, பௌத்தத்தை ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்துபவர்கள்தான்.
இதனை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? காணி அதிகாரம் தமிழர்களிடம் இருந்தால் மட்டும்தான் இந்த விடயத்தை, தென்னிலங்கையின் விருப்பத்திற்கு அமைவாக முன்னெடுப்பதை தடுக்கமுடியும்.
இதனைத் தவிர வேறு வழியில்லை – ஏனெனில், சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று, ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கை – ஒரு மத மேலாதிக்க நடவடிக்கை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கூறியிருக்கின்றது.
அமெரிக்க மத விகாரங்களுக்கான குழுவின் இந்த ஆண்டுக்கான, அறிக்கையிலும், தொல்பொருள் திணைக்களம் ஒரு மதத்தை முன்னிறுத்தி செயல்படுகின்றது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான சர்வதேச அவதானங்களுக்கு மத்தியில்தான் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஓர் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.
இதற்கு முதலில், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அனைத்து கட்சி மாநாடு ஒன்றை கூட்ட வேண்டும்.
விடயங்களை அனைவருமாக, ஜனநாயக வழியில் எவ்வாறு எதிர்கொள்வது, அதற்காக உடனடி – இடைக்கால – நீண்டகால அடிப்படையில் எவ்வாறு இயங்குவது – என்னுமடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
இதற்கென அனைத்து கட்சிகள் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
இலங்கைக்குள் சட்டரீதியில் கையாளக் கூடிய விடயங்களை கையாளும் அதேவேளை, தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்னுமடிப்படையிலும் சிந்திக்க வேண்டும்.