வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். அத்துடன், இருநாடுகளுக்கு இடையில் காணப்படும், விமானம் மற்றும் கடல் இணைப்பைப் பயன்படுத்தி மக்களிடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தனர். கொழும்பு துறைமுகத்தின் ஊடாக பங்களாதேஷ் கப்பல்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல், இலங்கையில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு, சுற்றுலா மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் சப்ரி, பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது பற்றியும் குறிப்பிட்டார். 22வது இந்து சமுத்திர சுற்றயல் நாடுகளின் அமைப்பின் கூட்டம் பங்களாதேஷில் நடைபெற்று வரும் நிலையில், அதன் துணைத் தலைவராக பங்கேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் வர்த்தக குழுவினருடனும் சந்திப்புக்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.