பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பளம் அதிகரிக்கப்படாமை மற்றும் மசகு எண்ணெய் விலையேற்றம் காரணமாகவே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடதுசாரிக் கட்சித் தலைவர் ஜான் லூக் மற்றும் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற அன்னி எர்னோக்ஸ் ஆகியோரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். நேற்றைய பேரணியில் மாத்திரம் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். எண்ணெய் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்ஸில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்கள் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் ஆட்சிக்கு கடும் சவாலாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.