பூர்வீக குடிகளுக்கான நாடாளுமன்ற சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதி

0
153

அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனட் அனுமதியளித்துள்ளது.

செனட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

பூர்வீக குடிகளின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனட்டின் 52 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் 19 பேர் எதிராக வாக்களித்தனர்.

சர்ஜவஜன வாக்கெடுப்பின் போது பூர்வீகமக்களின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தால் அதன் பின்னர் பூர்வீக மக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான சுயாதீன குழுவொன்று உருவாக்கப்படும்.

இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்பதுடன் இரண்டு முதல் ஆறு மாதங்களிற்குள் அவர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் ஒக்டோபரில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் 1999க்கு பின்னர் அவுஸ்திரேலிய மக்கள் முதல் தடவையாக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பார்கள்.

1999இல் குடியரசு குறித்த மக்கள் கருத்துக்கணிப்பு இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய மக்கள் அதனை நிராகரித்திருந்தனர்.