பொய்க்குற்றச்சாட்டுகள் மூலம் அரசை பலவீனப்படுத்த முடியாது – காமினி

0
222

போலிக் குற்றச்சாட்டுக்கள் மூலம் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்போம் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து பல சவால்கள் ஏற்பட்டன. பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க ஆரம்பத்திலிருந்து பொறுப்புடன் செயல்பட்டுள்ளது. பலம் வாய்ந்த நாடுகளால் கூட கட்டுப்படுத்த முடியாத வைரஸ் பரவலை அரசாங்கம் குறுகிய காலத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

கொரோனா தடுப்பூசி பெருந்தொகையான மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

எதிர்க்கட்சியினர் பல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை குறுகிய காலத்தில் செயல்படுத்தியுள்ளோம். சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்ட உள்ளடக்கத்தை 2023 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளோம். ஆளுங் கூட்டணிக்குள் ஒரு சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. பேச்சுவார்த்தை மூலம் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்படும்- என்றார்.