பொருளாதாரம் இன்னும் இக்கட்டான நிலையிலேயே இருக்கிறது- ஐ.எம்.எப்

0
34

இலங்கையில் பொருளாதார ஓரளவு மீட்சி பெற்று வந்தாலும், பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இருப்பதாகவும், இதனால் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைக்கும் வகையில் பொருளாதார மறுசீரமைப்புக்கான உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் அவசியமாகுமென என்றும் சர்வதேச நாணய நிதியத்தின தகவல் தொடர்புத் துறை பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். 

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

“பெப்ரவரி 28 ஆம் திகதி, நாணய நிதியத்தின் நிர்வாக சபை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்தது.; இது இலங்கைக்கு உடனடியாக 334 மில்லியன் டொலர் நிதி ஒத்துழைப்புக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளது. மேலும் இந்த 334 மில்லியன் டொலருடன், நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பலனளிக்கின்றன என்பதையும் குறிப்பிட முடியும். பொருளாதார வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது.

வருவாயும் அதிகரித்து வருகிறது, சர்வதேச இருப்புக்கள் அதிகரித்து வருகின்றன. 2024 இல் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையிள் வளர்ச்சி தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவை சகலதும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் நேர்மறையான முன்னேற்றங்களாக அமைந்துள்ளன. 

இருந்தபோதும், பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. எனவே பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய மறுசீரமைப்பு உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.