மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்:நகரசபை முதல்வர்

0
244

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரனா தொற்று காரணமாக மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளை தனிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தேசிய கொரோனா செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவிற்பனை நிலையங்கள்,மரக்கறி விற்பனை நிலையங்கள்,பழ விற்பனை நிலையங்கள்,பல சரக்கு விற்பனை நிலையங்கள்,பேக்கரிகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் உடனடியாக மூடப்படவேண்டும். என்பதுடன் திறக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும்,அவ்வாறு செயற்படாத வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பூநொச்சிமுனை,கல்லடி வேலூர்,திருச்செந்தூர்,பாலமீன்மடு,சின்னஊறணி ஆகிய ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளும் முற்றாக முடக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி மாநகரசபை எல்லைக்குள் கொரனா தொற்றினை தடுப்பதற்கு அனைவரையும் ஒத்துழைப்பினையும் மாநகரசபை வேண்டிக்கொள்வதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.