மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண, கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டியில், மட்டக்களப்பு மாவட்டச் செயலக பெண்கள் அணியை எதிர்த்து மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பெண்கள் அணி இன்று மோதியது.
பட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நீர்ப்பாசன திணைக்கள பெண்கள் அணி, 8 பந்துப் பரிமாற்ற நிறைவில், 6 இலக்குகளை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாவட்டச் செயலக பெண்கள் அணி இலக்குகள் இழப்பின்றி, 5வது பந்துப்பரிமாற்றத்தில் வெற்றியிலக்கை அடைந்தது.
இன்றைய போட்டிகளை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா முரளிதரன், காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி, சிரேஸ்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் ஈஸ்வரன் உட்பட மாவட்டச் செயலக மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டனர்.