இலங்கையில், வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான, சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு, மன்னாரில், இன்று நடைபெற்றது.தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதிகளான நஜாத் மற்றும் அமீல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், மன்னார் மாவட்ட தொடர்பாடலுக்கான மையத்தின் இணைப்பாளர் ஜோண்சன் தலைமையில், தனியார் விருந்தினர் விடுதியில், செயலமர்வு நடத்தப்பட்டது.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், இலங்கை கெல்விட்டாஸ்க் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில், மாவட்ட ரீதியில் உள்ள, சமூக பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, செயலமர்வு இடம்பெற்றது.
பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள், வன்முறை தீவிரவாத செயற்பாடுகளை நோக்கி நகர்வதை தடுக்கும் நோக்கிலும், பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும், சிவில் சமூக குழுக்களின், தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாகவும், செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இலங்கையில், இன ரீதியான முரண்பாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு, அந்தப் பகுதிகளில், திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.