வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இன்று, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டதுடன், எதிர்வரும் சனிக்கிழமை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.
1998 முதல் 2003 செப்டெம்பர் வரை, யாழ்ப்பாணம் கொடிகாமம் போகட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2003 முதல் 2004 ஆகஸ்ட் வரை, நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
அதன் பின்னர், 2004 ஒக்டோபர் முதல் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வரை, தொழில் திணைக்கள பிரதி ஆணையாளராக பணியாற்றினார்.
தொடர்ந்து, 2015 ஜூன் முதல் 2019 செப்டெம்பர் வரை, யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலாளராகவும்,
2019 ஒக்டோபர் முதல் 2019 டிசம்பர் வரை, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
2019 டிசம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரை, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராகப் பணியாற்றிய வேளை, நிர்வாக சேவை விசேட தரத்திற்குத் தேர்வாகிய க.கனகேஸ்வரன், கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக, க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.