அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை, மாகாண சபைகளுக்கு வழங்குவதே முதன்மையான இலக்கு எனவும், பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை வழங்குவதில், எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, ‘நல்லிணக்கத்துக்கான மதங்கள்’ தேசிய சர்வ மத மாநாட்டில், இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கடைசிப் பகுதியில் இருக்கிறோம்.
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம்.
இது தொடர்பாக, சிறையில் இருந்த சிலரை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இப்போதுள்ள பிரதான கேள்வியாகும்.
இதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பல அறிக்கைகள் உள்ளன.
அவை தொடர்பில் ஆராய்ந்து, நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸிடம் இருந்து தனியொரு அறிக்கை பெறப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வரைவை நாங்கள் நிறைவேற்றிய பின்னர், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, இந்த வேலைத் திட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.
ஏனைய நாடுகளிடம் இருந்தும் அதற்கான உதவிகள் கிடைக்கின்றன.
அதற்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் பின்னர் அரசியல் பிரச்சினைகள் உள்ளன.
காணிப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களிலும், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.
அனைத்து தரப்பினரையும் அழைத்து, இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேட எதிர்பார்க்கிறோம்.
1985 வரைவின்படி செயற்படுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிப் பிரதிநிகளைச் சந்தித்து, இது குறித்து கலந்துரையாடவுள்ளேன்.
பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய நிலையில், மேலும் பல காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதே முறையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.
அடுத்த பிரச்சினை அதிகாரப் பகிர்வு.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதே, இங்கு முதன்மையான கோரிக்கையாகும்.
பொலிஸ் அதிகாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை.
அதனைப் பின்னர் பார்க்கலாம்.
காணிச் சட்டத்தை சமர்பிக்க வேண்டும்.
ஏனைய விடயங்களை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
அதற்காக மற்றைய கட்சிகளுடன் கலந்துரையாடி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணக்கம் எட்டப்பட்டு வருகிறது.
மாகாண கல்விச் சபையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் தற்போது கலந்துரையாடி வருகின்றோம்.
ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவ எதிர்பார்க்கிறோம்.
சுற்றுலா சபை, விவசாய நவீன மயப்படுத்தலுக்கான மாகாண மட்ட குழுக்களை நியமிக்கவும் எதிர்பார்க்கிறோம்.
இருபது அமைச்சுகள் செய்ய வேண்டிய பணியை, 5 மாகாண அமைச்சுக்களின் கீழ் செய்ய முயற்சிக்கிறோம்.
இதன் போது, சாதாரணமான முறையில் செயற்பட முடியாது.
எனவே, அதற்கேற்றவாறு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கிறேன்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த பின்னர், வரவு செலவு திட்டத்தின் ஊடாக பண்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் செனட் சபை தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை.
ஆனால் அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே, அதனை செய்ய முடியும்.
அதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
அது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறேன்.
அதனுடன் நாட்டுக்குள் புதிய சூழலைக் கட்டமைக்க வேண்டும்.
இந்த விடயத்தில், பெரும் பொறுப்புகள், மதத் தலைவர்களைச் சார்ந்துள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடி, சாத்தியமான பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.’ என குறிப்பிட்டுள்ளார்.