புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான ‘மாடர்னா’ தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த செய்தி வந்துள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பு மருந்தை உருவாக்க அதிக புதுமையான மற்றும் சோதனை முறையிலான அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றன.
இது தங்களுக்கு சிறந்த ஒரு நாள் என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது ஆரம்பக் கட்ட தகவல்களே. பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.
இது எந்த அளவிற்குப் பலனளிக்கும்?
அமெரிக்காவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பு மருந்திற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிபேருக்கு நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் மருந்து வழங்கப்பட்டது. பிறருக்கு டம்மி ஊசிகள் வழங்கப்பட்டன.
கோவிட் அறிகுறிகள் உருவாகிய முதல் 95 பேரைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட ஐந்து பேருக்கு மட்டுமே கோவிட் கண்டறியப்பட்டது. மீதமுள்ள 90 பேர் டம்மி ஊசிகள் கொடுக்கப்பட்டவர்கள். இந்த தடுப்பு மருந்து 94.5 சதவீத அளவு பாதுகாப்பு வழங்குகிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இந்த தடுப்பு மருந்து பரிசோதனை சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த நாள்,” என மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தால் சாக் தெரிவித்தார்.