மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மாசி மஹோற்சவம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

0
116

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள, மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய, மாசி மஹோற்சவத்திற்கான, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகானுக்கும், ஆலய அறங்காவலர் சபை தலைவர் பி.தருவானந்தா தலைமையிலான குழுவினருக்கும் இடையில், கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆலயத்திற்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடயங்களை ஆராய்ந்தார்.

மஹோற்சவத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், எவ்வித தடைகளும் இன்றி, பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாதுகாப்பு பணிகளில், இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே, எட்டாவது கஜபா படையணி கேர்ணல் சில்வா உட்பட, ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.