அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோதமாக அரசு இரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றார் என்பது உட்பட டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று டிரம்ப் தனது 77-வது பிறந்த நாளில், இரகசிய ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக மியாமி நகர நீதிமன்றில் ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரான டிரம்பின் முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் நீதிமன்றில் ஆஜரான போது, அவர்கள் இருவரையும் மியாமி நகர பொலிஸார் கைதுசெய்தனர்.
அவர்களது கை ரேகைகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து நடந்த விசாரணையின்போது டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்து தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, டிரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பிணை வழங்கி விடுவித்தார்.
முன்னதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.