உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் விற்பனைக் கண்காட்சிகள்

0
209

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும், சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று இடம்பெற்றது.

சமுர்த்தி முகாமையாளர் அன்ரனி குரூஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன், சமுர்த்தி அபிமாணி விற்பனைச் சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து விருந்தினர்கள் சந்தையை பார்வையிட்டதுடன், பொருட்களையும் கொள்வனவு செய்தனர்.

இதேவேளை, தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில், சமுர்த்தி அபிமாணி விற்பனை கண்காட்சி இன்று இடம்பெற்றது. வரணி சமுர்த்தி வங்கிக்குட்பட்ட பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களது உற்பத்திப்பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றது. வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறி வகைகள், பனை, தென்னை சார்ந்த கைவினைப் பொருட்கள், புடவைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

சமுர்த்தி சமுதாய வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஆனந்த கௌரி தலைமையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விற்பனைக் கண்காட்சி இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வலி. வடக்கு பிரதேச செயலர் எஸ்.சிவஸ்ரீ கலந்துகொண்டு விற்பனைக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். குறித்த விற்பனைக் கண்காட்சி நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.