யாழ்ப்பாணம் கலட்டி சந்திக்கு அருகில் இயங்கி வரும் சட்டவிரோத மருந்தகத்தினை சோதனை செய்யச் சென்ற பிராந்திய உணவு, மருந்துப் பரிசோதகர்கள் இரண்டு பேரை பூட்டி வைத்த மருந்தக உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றனர்.
சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரை கைது செய்தனர்.