யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் திருட்டு!

0
89

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், நோயாளி ஒருவரிடம் சகஜமாக உரையாடி, அவருடைய மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தவர்கள், பொலிஸாரிடமோ, வைத்தியசாலை நிர்வாகத்திடமோ அறிவிக்க முடியும் எனவும், வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், நேற்று மதியம், பார்வையாளர் நேரத்தில், நூதனமான முறையிலே திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம், சகஜமாக உரையாடி, அவருடைய மோதிரம், சிறு தொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்ற நபர், அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருட்டில் ஈடுபட்ட நபர், நோயாளியை எக்ஸ்ரே எடுக்க போக வேண்டும் எனக் கூறி, எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று, நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.
குறிப்பிட்ட நபர், கண்காணிப்பு கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இதனால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள், தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வர வேண்டாம்.
அத்துடன், இனந்தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்க வேண்டும்.
என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.