எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நகரில் இடம்பெற்ற மினுவாங்கொட ஜனபவுர மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சில தலைவர்கள் கோப்புகளை தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்கு வந்து ஊழல் பேரங்கள் குறித்து பேசி ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது.
நாட்டை வங்குரோத்தாக்கியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்ற தீர்ப்பை பெற நடவடிக்கை எடுத்தது.
இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.
ஐக்கிய மக்கள் சக்தி கோப்புகளை காட்டி பொய்யான நடவடிக்கைகளை நடத்துவதில்லை.
ஊழலுக்கு எதிராக முன்னிற்கின்றோம் என்று கூறும் சில தரப்பின் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம்.
உண்மையாகவும் தூய்மையாகவும் ஐக்கிய மக்கள் சக்தியானது திருடர்களுடன் எந்த டீல்களையும் மேற்கொள்ளவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, திருடர்களை பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை வெளிக்கொணர முடிந்தது.
தற்போது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி நடந்து வருகின்றது.
இந்த மனுவின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கிய, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குடியுரிமைகளை இல்லாதொழிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பெடுத்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி நாம் கையில் வைத்திருந்த பத்திரங்களைக் கூடப் பறித்தெடுத்தனர்.
எனது உயிரை பறித்தாலும் இந்த திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்.