பாகிஸ்தானின் நெருக்கடிமிகு அரசியல் களத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக பகைமையையும், வெறுப்பையும் வளர்த்துவந்த மதவாத மையம் ஒன்றிலிருந்து ஒரு விடுதலைக் குரல் வெளிப்பட்டுள்ளது.
அது மௌலான அப்துல் அஸீஸ் காசி கடந்த ஞாயிற்றுக் கிழமை லால் மஸ்ஜிதில் செய்த உபதேசம்!
வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு நீண்டகாலம் களமாக விளங்கிய லால் மஸ்ஜிதியில் இருந்து எழும் இந்த குரல், பாகிஸ்தான் அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்பது பலரதும் அபிப்பிராயம்.
இஸ்லாமாபாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற லால் மஸ்ஜிதின் இமாம் மௌலானா அப்துல் அஸீஸ் காசி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உரையில் கூட்டத்திடம் ஓர் எளிய கேள்வியை எழுப்பினார்:
“இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்தில் ஈடுபட்டால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவீர்கள்?”
அடர்ந்த மௌனமும், உயராத கைகளும், அதிர்ச்சியூட்ட செய்தன. இது பாகிஸ்தான் அல்லவா? சிறிது நேரம் நிசப்தமாக நின்ற மௌலானா அஸீஸ், பின்னர் கூறினார்: “மிகக் குறைவான கைகள்தான் உயர்ந்தன. இதன் அர்த்தம், இப்போது பலர் விழித்திருக்கிறார்கள் என்பதே.”
மதத்தால் போதையேற்றும் அரசியல், பாகிஸ்தானில் தோல்வியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இந்த நிகழ்வு சொல்கிறது.
காலம் கடந்த உண்மைகள்
பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் இந்த ஒற்றை நிகழ்வு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. காலம் காலமாக பாகிஸ்தானின் அடையாளமாக இருந்துவந்த இந்திய மற்றும் மத விரோத உணர்வுகள் இன்று மக்களிடையே மங்கிவிட்டதை இது காட்டுகிறது. அதுவும் தீவிரவாதத்தின் கூடாரங்களாக திகழ்ந்த அமைப்புகளின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விடயமாகும். அதற்கு பதிலாக அவர்களின் விழிப்புணர்வு தங்கள் சொந்த அரசின் செயல்பாடுகள் மீது திரும்பியுள்ளது ஆரோக்கியமான விடயமாகும்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், மௌலானா அஸீஸ் பாகிஸ்தான் இராணுவத்தையும், அதிகாரிகளின் அடக்குமுறைகளையும் வெளிப்படையாக விமர்சித்தார். அவரது வார்த்தைகள் அந்நாட்டு மக்களின் மனதில் நீண்ட நாட்களாக புதைந்துகிடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.
“பாகிஸ்தானில் நடைபெறும் நிர்வாக ஆட்சிகள், இந்நாட்டு மக்களை இந்தியாவைவிட கடுமையாக ஒடுக்குகின்றன,” என்ற அவரது கூற்று, பல தசாப்தங்களாக அந்நாட்டில் கட்டமைக்கப்பட்ட கருத்தியலை நேரடியாக எதிர்க்கிறது.
வரலாற்றின் சாட்சியம்
2007ஆம் ஆண்டு ‘Operation Silence’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, லால் மஸ்ஜித் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் பிளவுகளுக்கான களமாக மாறியது.
மதவாதத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானில் ஷரியா சட்டங்களை அமல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இராணுவம் லால் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தியது. அச்சம்பவத்தில் அப்துல் அஸீஸின் சகோதரர் அப்துல் ரஷீத் காசி கொல்லப்பட்டார்.மௌலானா அஸீஸ் சரணடைந்தார்.
“லால் மஸ்ஜித் பேரழிவு இந்தியாவில் நடந்ததா? பாகிஸ்தானில் நடந்ததா?” என அவர் கேட்கிறார். “இந்தியா தன் குடிமக்கள் மீது குண்டு வீசுகிறதா? பாகிஸ்தானில் போன்று மக்கள் காணாமல் போகிறார்களா இந்தியாவில்?”
அவரது கேள்விகள் அடுக்கடுக்காக பாகிஸ்தான் மக்களை சிந்திக்க வைக்கின்றன.
காணாமல் போனவர்களின் குரல்
“பாகிஸ்தானில் காணாமல் போனோருக்கான இயக்கம் போராடி வருகிறது. தாய்மார்களும் சகோதரிகளும் அமர்ந்து போராட்டத்தில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள். நீதிமன்றங்களை நாடிச் சென்ற மக்கள் சோர்ந்துபோயுள்ளனர். சோர்ந்து போன அவர்கள் இப்போது அல்லாஹ்விடம் உதவி வேண்டி கையேந்தி நிற்கின்றனர்,” என்று மௌலானா அஸீஸ் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
இத்தகைய கேள்விகளும், விமர்சனங்களும் ஒருகாலத்தில் மனித உரிமை அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமே எழுப்பப்பட்டன. ஆனால் இப்போது, பாகிஸ்தானின் மதவாத மையங்களுக்குள் இருந்தே இந்த ஆதங்கங்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
புதிய விழிப்புணர்வு
மௌலானா அப்துல் அஸீஸ், இப்போது வெளிப்படையாகக் கூறுகிறார்: “பாகிஸ்தானிலுள்ள இன மற்றும் மதச் சிறுபான்மைகள் கூட இந்தியாவை அடிப்படைச் சுதந்திரங்களை வழங்கும் இடமாகக் காண ஆரம்பித்துள்ளனர்.”
“அரசு ஆதரவு பெற்ற மார்க்கத் தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒடுக்குமுறைகளை ஆதரிக்கின்றன“ என்று ஜனநாயக உரிமைகளை எடுத்துக்காட்டி மதவாதம் பிற்போக்குத்தனத்திற்கு எப்படி துணை போகிறது என்பதை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்திற்கான கேள்விகள்
வெறுப்பரசியலையும், தீவிரவாதத்தையும் வளர்ப்பதால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற்றமடைய போவதில்லை என்ற செய்தியை பாகிஸ்தான் மக்களுக்கு இந்த நிகழ்வு வழங்குகிறது.
காலங்காலமாக ஒருவருக்கொருவர் எதிரிகளாக காட்டப்பட்ட இரு அண்டை நாடுகளின் உண்மை நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பக்குவம் மக்களிடையே வளர்ந்து வருவதன் அறிகுறியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் தீவிரவாத அழைப்புகளுக்கு பதிலளிக்கும் சக்திவாய்ந்த இடமாக இருந்த லால் மஸ்ஜிதியின் மத தலைமைகள் இனி இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்க மாட்டார்கள் என்பது, பாகிஸ்தானுக்குள் ஆழமான அரசியல் விரிசல்களை உருவாக்கும்.
லால் மஸ்ஜிதியிலிருந்து எழும் இந்த குரல் உண்மையான குரலாக அமைந்தால், பாகிஸ்தான் அரசியலில் மட்டுமல்லாமல், பிராந்தியம் முழுவதும் இந்த மாற்றம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை. குறுகிய அரசியல் மற்றும் மத தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு, அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டம், அனைத்து எல்லைகளையும் தாண்டி ஒன்றுபட்ட குரலாக ஒலிக்கும் காலம் வந்துவிட்டதை இது உணர்த்துகிறது.