வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்: இந்தியப் பிரதமர் உரை

0
190

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற்றமடைய வேண்டும் என, இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வில், உரையாற்றும்
போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் இன்றோடு நிறைவடைகின்றது.
இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வு, இன்று கோலாகலமாக இடம்பெற்றது.
இந்திய தலைநர் புது டில்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதன்பின்னர், சுதந்திர தின உரையை மோடி ஆற்றினார்.
‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நாளை கொண்டாடிவருகிறது.
காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் நாள் இது.
வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.
சுதந்திரத்துக்கு முதல் நாள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது.
ஜனநாயகத்தின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எமக்கு சரியான வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம், புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை.
நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் விரைவான வளர்ச்சி என உலகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.
அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.
உலக நாடுகள் தங்கள் பிரச்னையை இந்தியாவின் வழியில் தீர்வுகாண முயல்கிறது.
சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது.
கடுமையான பேராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சி பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் உலகத்திற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.
பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
2047க்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்.
அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றும் இந்தியப்
பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.