எரிபொருள் வழங்கக் கோரி, வவுனியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார பணியாளர்களினால், இன்று, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார பணியாளர்களுக்கென, விசேட தினத்தில், தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில், வைத்தியசாலை பணியாளர்களுக்காக, விசேட தினத்தில், தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இச்செயற்பாடானது, கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொது மக்களின் வரிசை ஊடாகவே, எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே, தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால், தமது கடமைக்கு, உரிய நேரத்திற்கு செல்வதில், சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, சுகாதார பணியாளர்கள், கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலை மாற்றப்பட்டு, தமக்கென, தனியான ஒரு தினத்தில், எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த நிலை தொடருமாயின், தொடர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளதாகவும், சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.